அமைதிப் பூக்கள் அள்ளித் தூவட்டுமே. அன்பை விதைக்கட்டுமே. வெடிக்கும் குண்டுகளின் சப்தம் நிற்கட்டுமே. மண்ணில் கொட்டும் இரத்தம் நிற்கட்டுமே. குருதிப்புனலைப் பருகிய உடம்பில் வெறியும் தனியட்டுமே; உடலைச் சிதைக்கும் போர்கள் நின்று உயிர்கள் தழைக்கட்டும்; எரித்தே கொள்ளும் ஏவுகனைகள் தாவுவதை நிறுத்தட்டுமே. வெடிக்கும் தோட்டாக்கள் பூ ஆரமாய் வந்து உடலை தழுவட்டுமே; யுத்தத்தில் வந்த இரத்தம் நிற்கட்டுமே; உயிரைக்குடிக்கும் யுத்தம் உறங்கட்டுமே; தருமோ யுத்தம் திரும்பி உயிரை; திரட்டுமோ பகையை; விரட்டுமோ தர்மத்தை; திருடுமோ நேசத்தை; தாங்குமா உலகம், வெட்டுபட்ட உடல்கள் எல்லாம் துடிதுடித்தே சாயிது; எங்கும் குருதிப்புனல்; நொடியில் சாவு; நோவுது மனசும்; முடமாய் ஆனவர்கள் பல நூறு ஆயிரம்; எடுக்க எடுக்க பிணக்குவியல்; வெட்டிய இடமெல்லாம், வடிந்தே ஓடுது குருதி ஆறு. குருதிமழையில் குளிக்குது பூமி; குண்டுமழையில் குடும்பமே அழியிது; பூமியே யுத்த மைதானமாகுது எங்கும் மரண ஓலமும் மயாணக்காடுகள் தான்; ஒரு நொடியில் அனாதையானது பல கோடி குடும்பம். நண்டும் சிண்டும் அனாதையாகுது; நளிந்தே பட்டினியில் சாகுது. கொட்டிய கோபத்தில், வெட்டிய உடலிருந்து விட்டே ஓடுது உயிரு. நடுங்கும் போர்களத்தில் நாயும் பேயும் எலும்பையும் சதையையும் தேடுது. எல்லைச் சண்டையோ; எலும்புக்குச் சண்டையோ; ஏகாதிபத்திய சண்டையோ; இனப்படுகொலையோ; ஈவு இரக்கம் இல்லாத பாலியல் படுகொலையோ; பகையோ, பலி தீர்க்கும் படலமோ, பார்க்க சகிக்கலையே; தாலியறுத்த மாந்தர்கள், நாதியத்து கிடப்பதைப்பார். அழகாய் ஓடிய நதியில், இரத்தவாடை அடிப்பதைப்பார். ஓயாத அழுகுரல்கள்...மரண ஓலங்கள்; அடுக்கடுக்காய் கிடக்கும் சடலங்களில் அழுகிய பிணங்களும் கிடப்பதைப்பார்; யார் தந்த சாபமோ; தாங்கியது பூமி; கண்ணீர் விட்டு கதறுது சாமி. சோகத்தில் துடிக்குது மனித இனம். சொந்தத்தைத்தேடியே கண்ணீர்வடிக்குது மனித இனம்; சொத்து சுகம் சொந்தத்தை விட்டு ஊர் மாறிப்போகுது; தொட்ட உறவு எல்லாம் தொடர்பு அறுத்து போகுது; என்ன யுத்தமோ, ஏன் இந்த குண்டுகளின் சப்தமோ; நிற்கட்டும் யுத்தம் இனி உனக்கெதற்கு இரத்தம். அமைதிப் பூக்கள் கசங்காது மீண்டும் மலரட்டும். கண்ணீர் வடிக்காது இதயங்கள் சிரிக்கட்டும். குண்டு மழைபொழியாது அமைதியில் பூமியும் நனையட்டும்; அன்பை பூமி தழுவட்டும். வந்தே புவியில் அமைதி குடி கொண்டு உறங்கட்டும்; சுதந்திர பூமியில், சுகமாய் பறவைகளும் திரியட்டும். தறிகெட்ட மனிதக் கூட்டம், மறுபடியும் அகிம்சை வழியில் வாழட்டும். பாசம் மீண்டும் படரட்டும்; பாவம் கழிந்து, புண்ணியம் தொடரட்டும். குண்டு மழை பொழிவது ஒடுங்கட்டும். அன்பு மழை பொழியட்டும்; பாசப்பயிர்கள் வளரட்டும்; அன்பை பூமி தழுவட்டும். மனித நேயத்தில் மக்கள் ஒன்று சேரட்டும்; அமைதிப் பூக்கள் மீண்டும் பூக்கட்டும், வேண்டாம் வேண்டம் விபரீத விடியல்; அமைதிப் பூக்கள் மீண்டும் பூக்கட்டும்; மனித நேயம் மீண்டும் பிறக்கட்டும். மனிதனை மனிதன் அடித்துச் சாகும் போர்கள் நிறுத்தப்படட்டும்; புவியைவிட்டு மனிதயினம் போகமால் இருக்க, அமைதிப்போர் தொடரட்டும்; அன்பை வீசி புவியை மணக்கச் செய்யட்டும்; இரத்த ஆறு இனியும் பாயாது; இதயத்தில் கருணை மழை பெய்யட்டும். அமைதிப் பூக்கள் மீண்டும் பூக்கட்டும். அன்பை நேசத்தை பாசத்தை மனித நேயத்தை வளர்க்கட்டும்.
Chennai, Tamil Nadu, India.